இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, May 8, 2015

ம.ம.க. பொதுச் செயலாளர் கடிதம்
பேரன்புக்குரிய மனிதநேய சொந்தங்களே... ஏக இறைவனின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக!
தரணியெங்கும் வாழும் மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களை, இனி அடிக்கடி கடிதம் வாயிலாகவும் சந்திக்கப் போகும் பெருமகிழ்ச்சியோடு இம்மடலை வரைகிறோம். அலைகடலில் துள்ளிப் பாயும் மீன்களைப் போல; அரசியல் களத்தில் சீறிப் பாயும் மனிதநேய சொந்தங்கள் நாம்; புதிய உத்வேகத்தோடு இப்போது புறப்பட்டிருக்கிறோம்.
புதுக்குடித்தனம் செல்லும் பிள்ளையைப் போல; பொறுப்புகள் கூடிய உணர்வுகளோடும்; புது ரத்தம் பாய்ச்சப்பட்ட தெம்போடும்; நமது பயணம் திசைக் காட்டப்பட்டிருக்கிறது.
தனித்துவத்தோடும், புதிய அடையாளத்தோடும் பயணிக்கும் இவ்வேளையில் அணுகுமுறையில் நிதானம், முடிவெடுப்பதில் முதிர்ச்சி, களப்பணிகளில் துணிச்சல், வாக்குறுதிகளில் நேர்மை ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி கவனமாக செயல்படுவது நமது கடமையாகும்.
சொந்தங்களே...
இந்தியா போன்ற பன்முக சமூகங்கள் வாழும் நாட்டில், சிறுபான்மையினர் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வழிநடத்துவது என்பது எளிதான காரியமில்லை. பன்முக அறிவும், பலவித அனுபவமும், அரசியல் நுட்பமும் கொண்ட தலைமையாலும்; அதற்கேற்ப பக்குவப்படுத்தப்பட்ட தொண்டர்களாலும் மட்டுமே அத்தகைய அரசியல் களத்தை வெற்றிகொள்ள முடியும். இதற்கு நேர்மாறான குணாதியங்களைக் கொண்டவர்களால் இக்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.
மனம்போன போக்கில் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவது என்பது ஒரு சமூகத்தையே தற்கொலைப் பாதைக்கு அழைத்துச் செல்வது போலாகிவிடும். அந்தத் தவறை நாம் அனுமதித்து விடக்கூடாது.
எனவேதான் மனிதநேய மக்கள் கட்சியின் இலக்குகளைத் தீர்மானித்து அதை செயல்படுத்துவதில் மிகுந்த நுட்பங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. அவையாவும் வெற்றிகளைக் குறிவைத்து நகர்த்தப்படும் திட்டங்கள் என்பது ஒருபுறம். அதேசமயம் வெற்றிகளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நம்மை நம்பி வரும் மக்களுக்கு வீழ்ச்சிகளை ஏற்படுத்தாதவைகளாக அவை இருக்க வேண்டும் என்ற அக்கறை மறுபுறம் என்பதும் முக்கியமாகும்.
அதாவது கொள்கை உணர்வோடு செயல்படும் அதே வேளையில் அணுகுமுறைகளில் நுட்பங்களை கையாளவேண்டி இருக்கிறது. அவ்வாறு செயல்பட்டால் தான் லட்சியங்களை எளிதாக வென்றெடுக்க முடியும் இது ஒரு சவாலான பணி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை சாதிப்பதில் தான் நமது அரசியல் புத்திசாலிதனம் அமைந்திருக்கிறது.
சொந்தங்களே...
நமது இந்திய தேசம் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டைக் கொண்டது. நமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில், அது சமூக உறவுகளை சீர்குலைக்காத அளவுக்கு கவனமாக முன்னெடுக்க வேண்டியது நமது கடமையாகும். அதனால்தான் நமது அரசியல் முன்னோடிகள் ‘உரிமைக்கு குரல் கொடுப்போம் - உறவுக்கு தோள் கொடுப்போம்’ என்றார்கள்.
இதை ஏன் குறிப்பிடுகிறோம் எனில், பொறுப்பற்ற மேடைப் பேச்சுக்கள்; வெறுப்பேற்றும் எழுத்துப் பதிவு; பொது இடங்களில் பக்குவமற்ற அணுகுமுறைகள் என சிலரின் நடவடிக்கைகள் ஒரு கட்சியை மட்டுமல்ல; ஒரு சமூகத்தையே சந்தியில் நிறுத்திவிடும். அத்தகைய பாதகங்களைத் தடுத்து நிறுத்தி; வாழும் நாட்டின் சூழலுக்கேற்ப; வாழும் கலையைக் கற்றுக்கொடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெரும்பான்மை சமூகங்களின் அன்பையும், ஆதரவையும் தக்கவைக்கும் வகையில் சிறுபான்மையினரின் அரசியல் போக்குகள் இருந்தால்தான் நல்லிணக்கத்துடன் கூடிய வெற்றிகளை சாதிக்க முடியும். அதுதான் அரசியல் களத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வலிமை சேர்க்கும்.
‘அறிவாளிகளைக் கொண்ட கூட்டத்திற்கு ஆயுதங்கள் தேவை இல்லை’ என்றார் கவிஞர் இக்பால் அவர்கள். ஆசியாவின் மூளை என ரவீந்திரநாத் தாகூரால் பாராட்டுப்பெற்ற உலகக் கவிஞர் அவர். அவரது கூற்றை புரிந்து கொண்டு இந்திய சூழலில் தமிழக மனநிலையில் அரசியல் பணி புரிய ஏராளமானோர் நமக்கு தேவைப்படுகிறார்கள். சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற நம் கொள்கைகளை அரசியல் களத்தில் செயல்படுத்த அவர்களை நாம் தயார்படுத்த வேண்டும்.
சொந்தங்களே...
நமது கட்சியில் ‘புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் - 2015’ என்ற பெயரில் லட்சக்கணக்கானோரை உறுப்பினர்ளாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். உழைப்பாளர்களின் சர்வதேச தினமான மே 1 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளோம். மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் நமது ஓய்வறியா உழைப்பின் மூலம் நமது பலத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்ளப் போகிறோம்.சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், வாகன ஊர்வலங்கள், கொடியேற்று நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், வீடு-வீதி சந்திப்புகள், தனிநபர் உரையாடல்கள், சமூக இணையதளங்கள் வழியாகப் பரப்புரைகள், தொலைக்காட்சி - வானொலி விளம்பரங்கள், காணொலி காட்சிகள் என எல்லா வடிவங்களையும் பயன்படுத்தி ‘களங்கள் யாவையும் கையிலெடுப்போம் - பாயும் திசையைத் தீர்மானிப்போம்’ என்ற முழக்கத்தோடு இப்பணிகள் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதோ... எப்போது உத்தரவு வரும்? என காத்திருந்த படை வீரர்களைப் போல நம் மனிதநேய சொந்தங்கள் களத்தில் ஓடத் தொடங்கி விட்டார்கள். மே மாதம் முழுக்க இத்திட்டத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் திருவிழாக்களைப் போல நடத்தப்பட உள்ளன. தலைமை நிர்வாகிகள் அனைவரும் ‘எமர்ஜென்சி’ நிலையில் இயங்கத் தொடங்கி விட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்களது நேரம் நெருக்கடிகளால் நிரம்பி வழிகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்ட உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள் தளபதிகளாக ஊர், ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாவட்டத்திற்கு 10 ஆயிரம் பேரைக் குறிவைத்து அவர்களது ஓட்டம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுவர்களில் விளம்பரங்கள் மின்னத் தொடங்கி விட்டன.
நமது உற்சாகமான செயல்பாடுகளைப் பார்த்து தாய்க்கழகமாம் தமுமுக பூரிப்படைகிறது. தாய்க்கழக மாவட்டச் செயலாளர்கள் நம்மைத் தொடர்புகொண்டு ‘உங்கள் பணிகளுக்கு எந்த மாதிரியான ஒத்துழைப்புகள் வேண்டும்? நாங்கள் பின்னால் இருந்து ஒத்துழைக்கிறோம்’ என கூறுகிறார்கள். நாம் அங்கு இல்லையே... நமது பெயர் இல்லையே... என்றெல்லாம் குறுகிய பார்வையோடு சிந்திக்காமல், நமது பிள்ளையான மமக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆவலை அவர்கள் வெளியிடுவதும், அதுபோல நடந்துகொள்வதும் நமது குடும்ப உறவை எடுத்துக் காட்டுகிறது. இதைப் புரிந்துகொண்டு பக்குவமாக செயல்படுவது நம் முதிர்ச்சியை வெளிக்காட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சொந்தங்களே...
யாரையெல்லாம் உறுப்பினர்களாக சேர்க்கலாம்? என நீங்கள் கேட்பது புரிகிறது. குடிகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மக்கள் விரோதிகள் ஆகியோரின் நிழலைக்கூட நாம் நெருங்கக்கூடாது. ஆம்! அவர்களெல்லாம் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
பென்குவின் பறவைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அன்னப்பறவை எப்படி பாலையும், தண்ணீரையும் பிரித்தெடுத்து பருகுமோ, அதுபோல நல்ல தண்ணீரையும், உப்பு தண்ணீரையும் தனித்தனியே பிரித்துக் குடிக்கும் ஆற்றல் பென்குவின் பறவைக்கு உண்டு. அந்த அழகான பறவையின் ஆற்றலைப் போன்றே, நாமும் உறுப்பினர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
பொது ஒழுங்குகளுக்கு உரித்தான பொதுமக்கள் தான் நமது இலக்கு. அவர்கள் யாராகவும் இருக்கலாம். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் என நமது கவனம் விரிய வேண்டும். நமது நீச்சல், குளத்தில் அல்ல... நீலக்கடலில் என்பதை மறந்துவிடக் கூடாது. யாரெல்லாம் நமது சேவை அரசியலை விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரையும் வென்றெடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
ஒரு வளரும் கட்சிக்கு அதன் ஊழியர்கள்தான் தூண்களாக இருக்க முடியும். அவர்களின் உற்சாகமான செயல்பாடுகள்தான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இளமையும், புதுமையும் கைகோர்க்கும் போது பயணமும், பணிகளும் சிறப்பாக இருக்கும். அவற்றோடு முதிர்ச்சியும் இணையும் போது இறையருளால் வெற்றி உறுதிப்படும்.
சொந்தங்களே...
வாருங்கள்! விரைந்து ஓடுங்கள்!
பாறைகளை உடைத்து பாதைகளை அமைப்போம்!
பார்வைகளை விரிவாக்கி பயணங்களை நடத்துவோம்!
மாபெரும் இலட்சியங்களின் புதல்வர்களாய், மக்களை சந்தித்து மாற்றங்களுக்கு விதை விதைப்போம். சிவந்த விழிகளில் கனவுகளை சுமந்து, தலைமுறைகள் வாழ களங்களை வெல்வோம்!
உங்களில் ஒருவன்
மு. தமிமுன் அன்சாரி

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...