இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, June 5, 2012


மதுக்கூர் கொல்லைத்தெரு மைனர் வீட்டு மர்ஹும் அப்துல் கபூர் அவர்களின் மனைவியும்,சேக்தாவூத்,அப்துல்சமது (ரோஜப்பூ),ஜாகீர் உசேன் ஆகியோரின் தாயாரும்,அமானுல்லா,சர்புதீன் ஆகியோரின் மாமியாருமான மகபூப் அம்மாள் அவர்கள் இன்று 05/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Monday, June 4, 2012


சந்தைப்பள்ளி அடிக்கல்  விழா

மதுக்கூர் சந்தைப்பள்ளிக்கூடத்திற்கு புது கட்டிட கட்டுவதற்கான முதன் முயற்சியாக அடிக்கல் நடும் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10:00 மணிக்கு நடந்தது (அல்ஹம்துலில்லாஹ்)


இந்நிகழ்ச்சியில் துவக்கமான பெரியவர் எ.எம்.அப்துல்காதர் அவர்கள் கல்வியின் சிறப்புகளையும்,அனைவரும் ஒருங்கிணைந்து இப்பள்ளிக்கூட புதிய கட்டிடத்தை கட்டிமுடிக்கவேண்டும் எனவும் இரத்தின சுருக்கமாக பேசினார்.அதனை தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டு அடிக்கல் நடும் நிகழ்ச்சி துவங்கியது.


இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள் முகம்மது பாரூக்,அப்துல் கறீம்,சங்க நிர்வாகிகள் அஜீஸ் ரஹ்மான்,ஜபருல்லாஹ்,கமருதீன்,பாரூக்,சலீம் மெளலானா,ஹாஜா மைதீன்,அப்துல்ரெஜாக்,முகமம்து அலிஜின்னா,அப்துல்சமது, கவுன்சிலர்கள் நாகூர்கனி,கபார்,ரியாஸ் அகமது மற்றும்  ஜமாத்,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


புதிய கட்டிட பணிகள் நிறைந்து நடைபெற துவா செய்வோம்.உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை தாரளமாக இப்பள்ளி கட்டிட கமிட்டியிடம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.  






மதுக்கூரில் பரபரப்பை ஏற்பாடுத்திய போஸ்டர்

நாளை மதுக்கூரில் உள்ள தர்ஹாவில் கந்தூரி விழா நடைபெற உள்ளது.கந்தூரி விழாயினை கண்டிக்கும் வண்ணம் நேற்று 03/06/2012 மதுக்கூர் வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

(எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் பெயரை போட்டு அடித்து இருக்கலாம்)



உலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள்


ஐக்கிய நாடுகள் சபையின் 40க்கும் மேலான அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, குறைப் பிரசவக் குழந்தைகள் குறித்து உலக அளவில் அறிக்கை ஒன்றினைத் தயாரித்துள்ளன. அதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அதிர்ச்சி செய்தி ஒன்றினை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்ட 199 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பிறக்கும் 2 கோடியே 70 லட்சம் குழந்தைகளில் (2010-ம் ஆண்டில்) 36 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறக்கின்றன. அதில் 3 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளில் 64 இறக்கின்றனவாம். பிறக்கும் மொத்த குழந்தைகளில் பாதி குழந்தைகள் குறைப்பிரசவத்தாலேயே இறக்கின்றன என்கிறது அறிக்கை. “Born too soon” (சீக்கிரம் நிகழும் பிறப்பு) என்ற தலைப்பிட்ட இந்த அறிக்கையை Save the Children என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. நிமோனியா என்கிற நுரையீரல் சுழற்சி நோய்க்குப் பிறகு, அதிகப்படியான மரணங்கள் இந்த குறைப் பிரசவத்தால் நிகழ்கின்றனவாம். உலக அளவில், வருடம் தோறும் 1 கோடியே 50 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தால் இறக்கின்றன. இது விகிதாச்சாரத்தில் 10க்கு 1 என்பதைக் காட்டிலும் கூடுலாகும். இதில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த உடனே இறந்துவிடுகிறதாம். உயிர் பிழைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள், உடல், நரம்பு குறைபாடுகளும், கல்வி பெற முடியாத குறைபாடும் கொண்டு குடும்பங்களில் பெரும் சுமையாக இருக்கின்றன.
உலக அளவில் கட்டணமில்லா மருத்துவமும் குறைப்பிரசவ தடுப்பும் கிடைக்குமானால் நான்கில் மூன்று பங்கு குறைப் பிரசவத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். குறைப்பிரசவம் என்பது கரு பிடித்து 37 வாரங்களிலோ அல்லது அதற்குக் குறைவான நாட்களிலோ பிறக்கும் குழந்தை என்று கூறும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிரந்தரமான அளவீட்டினையே Save the Children அமைப்பின் நிபுணர்கள் குழுவும் எடுத்துக் கொண்டுள்ளது.
உடல் முதிர்ச்சியற்ற திருமணம் மற்றும் கர்ப்பம், கருவுற்ற பெண்μக்குத் தேவையான ஊட்டம் கிட்டாமை, தாய் போதுமான உடல்நலமில்லாமல் இருத்தல் ஆகியன குறைப் பிரசவத்துக்கும்; தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கே சிக்கல் ஏற்படுவதற்கும் காரணம் என்கிறார் Save the Children-க்கான இந்தியப் பிரிவின் இயக்குனர் தாமஸ் சாண்டி.
அனைத்துக் குழந்தைகளுமே சிக்கலான சூழலில்தான் பிறக்கின்றன என்று கூறும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், இந்த சிக்கல் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய சவாலாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். இந்த அறிக்கையின் முன்னுரையை மூன் தான் எழுதியிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உலகப் பார்வை (Global Strategy for Women and Children) எனும் அவரது திட்டத்தின் ஒரு பகுதி குறைப்பிரசவ பிறப்பு மற்றும் சிறப்பைத் தடுப்பதுதான் என்கிறார். வடக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில்தான் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக குறைப் பிரசவங்கள் நிகழ்கின்றதாம். பிரேசில், அமெரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளில் குறைப்பிரசவம் பெரிய அளவிலான பிரச்சனை என சொல்லப்படுகிறது. 15 சதவீதத்துக்கும் கூடுதலான குறைப் பிரசவம் கொண்ட 11 நாடுகளில் இரண்டு நாடுகள் சகாரா பகுதியில் அமைந்துள்ள ஆப்ரிக்க நாடுகளாகும். உயர் வருமானம் கொண்ட நாடுகளில் தோராயமாக 9 சதவீதமும், ஏழ்மை நாடுகளில் தோராயமாக 12 சதவீதமும் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கின்றன.
குறைப் பிரசவத்துக்கான எண்ணற்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கருவுற்ற பெண் எடை குறைவாகவோ, கூடுதலாகவோ இருப்பது, சர்க்கரை குறைபாடு காணப்படுவது, உயரழுத்தம் காணப்படுவது, புகைப்பது, நோய் தொற்று இருப்பது, திருமண வயது 17க்கு கீழும், 40க்கு மேலும் இருப்பது, மரபியல் குறைபாடு காணப்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட கருவைக் கொண்டிருப்பது, இரண்டு குழந்தைக்கு இடையில் போதிய இடைவெளியின்றி கருவுறுவது ஆகிய காரணங்கள் குறைப் பிரசவத்துக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். கர்ப்பிணிப் பெண்களை இக்குறைபாடுகளில் இருந்து முழுவதுமாக பராமரித்தால் குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்


இந்நாட்டு மக்கள் அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட போர் இந்தப் போரைத் தொடுத்தது சீனாவோ, பாகிஸ்தானோ வேறு எந்த பயங்கரவாத இயக்கங்களோ அல்ல. நம் வரியை வாங்கி நம்மை நிர்வாகம் செய்வதாகவும் நாங்கள் மக்கள்நல அரசாங்கத்தை (Welfare State) நடத்திவருவதாக தம்பட்டம் அடித்துவரும் நமது மத்திய அரசுதான் இந்த இரக்கமற்ற போரைத் தொடுத்துவிட்டது. ஏழைகள், உழைப்பாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு.
சர்வதேச ஏமாளிகளா மக்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மக்களாகிய நாம் சர்வதேச ஏமாளிகள் என்பதை சொல்லாமல் தம் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளது மக்கள்(!) நல மத்திய அரசு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.54 ரூபாய் அதிகரிக்கப்பட்டு மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொண்டுள்ளது மன்மோகன்சிங் அரசு. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ண யித்துக் கொள்ளலாம் என்ற மக்கள் விரோத, மூடத்தனமான முடிவின் மூலம் அரசாங்கம் தங்கள் குடிமக்களின் மீது தீராத வேதனையை ஏவிவிட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 106 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 90 டாலர்களாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்? ஆனால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் அல்லவா? டாலர் பொருளாதாரத்தினால் விளைந்த தீமை!
சர்வதேச எண்ணெய் சந்தையை டாலர் பொருளாதாரத்தினால் நிர்ணயித்ததால் மிகப் பெரிய தீங்கினை நாம் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. முன்னர் 49 பாய் மதிப்பிலான ஒரு டாலர் இப்போது 56 ரூபாய்க்கு மேலே எகிறியுள்ளது. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய்க்காக அதிக அளவு டாலரை செலுத்த வேண்டிய நிலையில் அதனால் ஏறும் விலை ஏற்றம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் விடிகிறது. ஒண்ணும் தெரியல... ஒரு இழவும் புரியல...
ஒண்ணும் தெரியல, ஒரு இழவும் புரியல... இவ்வாறு மனதிற்குள் பாடிக்கொண்டிருப்பவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழு துணைத் தலைவர் (எல்லாரும் திட்டுவதற்கென்றே போடப்பட்ட கமிஷன் போலும்) மாண்டெக்சிங் அலுவாலியா இந்த மூவரும்தான் இவ்வாறு புலம்பித் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
ஊரு உலகமெல்லாம் குறைந்த விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை நமக்கு மட்டும் ஏன் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது? டாலரின் மதிப்பு ஏன் திடீரென ஏறியது?
இந்திய அரசு ஏற்றுமதியை விட இறக்குமதியைத்தான் அதிகம் செய்கிறது. இந்த இறக்குமதிக்கான நாணயம் டாலரில்தான் மதிப்பிடப்படுகிறது.
இறக்குமதிக்காக இந்திய அரசு செய்யும் செலவில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசால் பெட்ரோல் டீசல் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியவில்லை. மாற்று எரிபொருளுக்கான புதிய முயற்சிகளுக்கும் வழியில்லை. ரூபாயின் சரிவைத் தடுக்க இறக்குமதியைக் குறைக்கவும் முடியவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கவும் வழியில்லை. இப்படி இல்லை என்ற சொல்லை மட்டுமே ஏகப்பட்ட ஸ்டாக் வைத்திருக்கும் மத்திய அரசைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
ஏற்கமுடியாத காரணங்கள் இந்தியா பெட்ரோல், டீசலை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால் விலையை மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் சர்வதேச பெட்ரோல் டீசல் விலைகளின் அடிப்படையில் செய்கிறோம். இதை எந்த அடிப்படையில் நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியும்?
மும்பையிலும், அஸ்ஸாமிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்காக போக்குவரத்துச் செலவு இல்லாமல் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் கொண்டுபோய் சேர்ப்பது எதற்காக? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான செலவுகளைக்கூட அந்தப் பண முதலைகளிடம் வசூலிக்காமல் இருக்கும் ஏமாளித்தனம் (அல்லது) கயமைத்தனம் மத்திய அரசுக்குத் தேவையா? சாதாரண சிறிய தொழில் முனைவோர் வரி ஏய்ப்பு செய்தால் பாய்ந்து பிராண்டும் அரசு இயந்திரங்கள், பண முதலைகளிடம் இறக்குமதி செய்யும் செலவுத் தொகையை வசூலிக்காமல் விட்டுக்கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
ஐந்து லட்சம் கோடி மானியம் பெறும் எண்ணெய் நிறுவனங்கள் இந்நாட்டின் ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களாலும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினாலும் மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதால் நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என நீட்டி முழக்கும் அரசியல்வாதிகளும், பன்னாட்டு அடிமைகளாக மாறியுள்ள சில ஊடகங்களும் ஒரு உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரி யாமலே மறைத்திருக்கிறார்கள். அதாவது நாட்டின் ஏழை மக்களை உறிஞ்சி அந்த ரத்தத்தையே எண்ணெயாக விற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொட்டி அழுதுவிட்டு, அதே எண்ணெய் நிறுவனங்களை விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும் என உரிமையும் வழங்கிவிட்டு ஆள்வோர் நாடகம் ஆடுவதை நாட்டு மக்கள் எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட போர், உக்கிரமமான போர் என்பதில் சந்தேகமே இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா? மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றும் முறையிலான கணக்கீட்டு முறையினால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கில் காட்டப் படுகின்றன. இது அப்பட்டமான பொய் என மத்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக நிரூபித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் உள்பட அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய் போன்றே இறக்குமதி வகையில் காட்டப்படும் ஏமாற்றுக் கணக்கு. மேலும் கப்பலில் கொண்டு வரும்போதும், கடலில் கசிந்த எண்ணெய் ஏற்றும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் கழிவு மற்றும் செலவு கணக்கு எல்லாவற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் கிடைக்கும் வண்ணம் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. அரசு அமைத்த குழுக்களே உண்மைகளை வெளியிட்ட பிறகும் அதனை வெளி யிட ஏன் இன்னும் தாமதம்? போட்டி போட்டு விலை உயர்த்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்தி வரி, மேல் சரி போன்றவை 32 சதவீதம் ஆகும். மாநில அரசின் விற்பனை வரி 27 சதவீதம் ஆகும். இவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு லாபம் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்ரோல் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிவருவது என்பதை கடந்த நிதியாண்டு வரி வருவாய் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரிகளை மத்திய அரசு பெருமளவு குறைத்துவிட்டால் மக்களை விலை உயர்வு என்ற துயரில் இருந்து மீட்க முடியும். பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முன்வரும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய் எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து வருடந்தோறும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பெட்ரோலும், 1 லட்சத்து 20 ஆயிரம் டீசலும் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான பெட்ரோல் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இதைப்போன்று இந்திய நாட்டிற்குள்ளே கிடைக்கும் கச்சா எண்ணெய் கூட இறக்குமதியான கணக்கில் காட்டும் கயமைத்தனத்தை என்னவென்பது? பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. ஏற்றப்பட்ட விலை உயர்வு உடனடியாக குறைக்கப்பட வேண்டும். மக்கள் மீது மென்மேலும் துன்பச்சுமைகளை ஏற்றும் எதேச்சதிகார அதிகார வர்க்கத்தை வாக்குச் சீட்டின் வழியாக கணக்குத் தீர்க்க காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

- சில உடனடி தீர்வுகள்
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவகைகளைக் குறைத்தால் விலை குறைக்க முடியும்.
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பணமுதலைகளுக்காகவும் அடிக்கடி வரிவிலக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கும் அரசுகள் மக்களுக்காக எப்போதாவது இந்த வரிச்சுமையைக் குறைத்து விலைகுறைக்க முன்வர வேண்டும்.
இதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்தபோது மத்திய அரசு விலையைக் குறைக்காதது ஏன்? அந்த லாபம் எல்லாம் எங்கே போனது?
நம்மை விட சின்னஞ்சிறு மாநிலமான கோவா முற்றிலுமாக வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயைக் குறைத்துள்ளது. இதனால் கோவா, விலை குறைவைப் பெற்று மகிழ்வதுடன் அதிகப்படியான 5.50 காசு குறைவினைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கோவாவைப் போல் தமிழக அரசும் வரியினைக் குறைத்து பெட்ரோல் கூடுதல் விலை உயர்வை சரிக்கட்ட முயற்சி எடுத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் தமிழக முதல்வரை வாழ்த்தும். பெட்ரோலுக்கான வரிவிதிப்பை குறைப்பதனால் ஏற்படும் இழப்பினை சரிக்கட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கான வரி விதிப்பினை அதிகரிக்கலாம்.

- மாற்று ஏற்பாடு எங்கே?
எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க என்னதான் பாரதூரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் வேகமாக வளரும் ஒரு நாடு மாற்று எரிபொருள் குறித்த திட்டங்களை ஏற்படுத்தாவிட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்களுக்கு எரிபொருளாக ‘எத்தனால்’ பயன்படுத்தினர். நம்நாட்டிலும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வாகனங்களின் என்ஜின்களுக்கு 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் கூட எத்தனால் 85 என்ற பெயரில் வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் 85 சதவீதம், எத்தனால் 15 சதவீதம் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வாகனங்களின் என்ஜின்களில் சிறு மாற்றங்களை செய்தால் போதும். இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவெனில் எத்தனால் எரிபொருளால் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- மக்கள் புரட்சியும் மந்தை ஆட்டு புத்தியும் தாங்க முடியாத விலை ஏற்றத்தில் சீற்றமடைந்த மக்களை திசைதிருப்ப செயற்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் பஞ்சத்தை ஏற்படுத்தி பெட்ரோல் பங்க்குகளை மொய்க்கும் வண்ணம் திசைமாற்றிவிட்ட அவலத்தை என்ன செய்வது?
விண்ணை மட்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சீற்றமடைந்த மக்கள் ஆள்வோரை எதிர்த்து போராடத்தானே முடியும். - இரட்டை வேடம் போடும் சில அரசியல் கட்சிகள்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறோம் என பெயரளவில் சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இவைகள் மத்தியில் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே வேடம் போடுகின்றன. விலையை பெயரளவிற்கு குறைத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- எத்தனால் புறக்கணிக்கப்பட்டது எதனால்?
இந்தியாவில் 560 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் 46 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத ஆலைகளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படாத காலங்களில் எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால் இந்தியா ஓரளவு நெருக்கடியில் இருந்து மீளலாம்.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் அம்பானிகளின் பெட்ரோலிய கொள்ளை லாபத்தை பாதிக்கும் என்பதால் மன்மோகன் அரசால் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டது. எத்தனால் எரிபொருள் எதனால் புறக்கணிப்பட்டது என்பது புரியும்தானே?

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு... தொடரும் வக்ஃபு முறைகேடுகள்


பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களுக்கு மாதம் 159 ரூபாய் மட்டும் வாடகை கொடுக்கிறார்கள். இவர்கள் தாதாக்களோ, ஆதிக்க வெறிபிடித்த பண முதலைகளோ அல்ல. மேற்கு வங்காள மாநில அரசுதான் இத்தகைய சாதனைக்கு(?) சொந்தக்காரனாக விளங்குகிறது.
ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், தலைமைச் செயலகம் செயல்படும் வில்லியம்ஸ் கோட்டை, சீதாபூர் மதரஸா மற்றும் அதைச் சார்ந்த மைதானம் (ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது), இவ்வாறு முக்கிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து மேற்கு வங்காள அரசு அற்பசொற்ப வாடகை கொடுத்து வந்தது நாட்டு மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.
2555 பிகாசாவுள்ள (511 ஏக்கர்) நிலத்திற்கு மாநில அரசு 159 ரூபாய் மட்டுமே மாத வாடகை செலுத்துகிறது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
இந்த 159 ரூபாய் மாத வாடகைக் கூட 1999ஆம் ஆண்டு வரைதான் கொடுத்து வந்தது. அதன்பிறகு அதனைக்கூட நிறுத்திவிட்டது. மேற்கூறப்பட்ட வக்ஃபு சொத்துக்களுக்கு முத்தவல்லியான மவ்லவி அபுல் பரகாத் தனது 99ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான அபுநயீம் சித்தீக்கியிடம் ஒரு பைசாகூட அரசால் வழங்கப்படவில்லை.
கொல்கத்தாவின் பல்லாயிரம் கோடி வக்ஃபு சொத்துக்களின் முத்தவல்லி அபூநயீம் சித்தீக்கி...

வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் நவாபாக இருந்த நவாப் அலி வர்திகான், சீதாபூர் மஸ்ஜித் மற்றும் மதரஸாவைப் பராமரிக்கும் செலவு வகைக்காக மவ்லவி சம்சுத்தீன் மற்றும் மசியுத்தீன் ஆகிய இருவருக்கும் கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் பிரம்மாண்டமான அரசு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்காக மிகப்பெரிய தொகையாக(?) 159 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.
எந்த மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் பராமரிப்புக்காக சொத்துக்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. மதரஸாவும், மஸ்ஜிதும் பாழடைந்த நிலையில் உள்ளன என்பதுதான் பெரும் சோகம்.
வில்லியம் கோட்டை, ராஜ்பவன், புகழ்பெற்ற ஈடன் கார்டன் உள்ளிட்ட பானிபவான் மைதானம் முதலிய முக்கிய இடங்கள் அனைத்தும் தங்களது மூதாதையர்களின் சொத்துக்களே என பெருமிதத்துடன் கூறுகிறார். ஆனால் இவர்களது உரிமையை மறுத்து நியாயமான தொகையை வழங்க மறுத்து அரசுகள் வீண் பிடிவாதம் காட்டி வருவதாக வருந்துகிறார்.
வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலம் தொடங்கி ஜவஹர்லால் நேரு தொடர்ந்து இந்திரா காந்தி, ஜோதிபாசு போன்றவர்களின் காலங்களில் கூட நியாயம் வழங்கப்படவில்லை.
சீதாபூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் 1772ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு மாதம் 158 ரூபாய் வாடகைத் தொகையாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக அபூநயீம் சித்தீக்கி கூறுகிறார். அதன்பிறகு ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடடா, என்ன நேர்மை? 17ஆம் நூற்றாண்டில் முர்ஷிதாபாத்துக்கு வருகை தந்த நவாப் அலி வர்திகான், ஹூக்ளி மாவட்டத்தில் 15 ஆயிரம் பிகா நிலமும் (3000 ஏக்கர்), ஹவுரா மற்றும் 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் 2555 பிகா நிலங்கள் (511 ஏக்கர்) வழங்கப்பட்டன. இன்று இவை அனைத்தும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளின் முக்கிய சொத்துக்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அநீதிகள் தொடர்கின்றன.
தனி நபர்கள் முறைகேடு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே முறைகேடு செய்தால் எங்குபோய் முறையிடுவது? முறையான, நீதியான நிர்வாகம் பற்றி வாய்கிழியப் பேசும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

Saturday, June 2, 2012


மணமகன் 
A.முகம்மது நிஜாமுதீன்
(த/பெ K.அப்துல் சலாம்)

மணமகள்
B.சாலிஹா இர்ஃபானா
(த/பெ K.பஷீர் அஹமது)

மணநாள்
ஹிஜிரி 1433 ஆம் ஆண்டு ரஜப் பிறை 12 (03.06.2012) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
முகம்மதியர் தெரு-மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வ ஐம பைனாகுமா பீகைர்.


மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் எதிர்புறம் (அண்ணா மெடிக்கல்ஸ் ) சுவரில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.




நிக்காஹ் வாழ்த்து

மணமகன் 
A.முகம்மது நிஜாமுதீன்
(த/பெ K.அப்துல் சலாம்)

மணமகள்
B.சாலிஹா இர்ஃபானா
(த/பெ K.பஷீர் அஹமது)

மணநாள்
ஹிஜிரி 1433 ஆம் ஆண்டு ரஜப் பிறை 12 (03.06.2012) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
முகம்மதியர் தெரு-மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வ ஐம பைனாகுமா பீகைர்.



மாவட்ட ஆட்சியருடன் மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு


கடந்த மாதம் (ஏப்ரல் 28) மதுக்கூர் தமுமுக சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பொதுகூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது ஒரு சம்பிரதய நிகழ்வாக இருக்கக்கூடாது என்ற முனைப்புடன் இருந்த மதுக்கூர் நகர தமுமுக நிர்வாகிகள் தீர்மானங்கள் சம்மந்தப்பட்ட அந்தந்த துறைக்களுக்கு பதிவு தபால்கள் மூலம் அனுப்பப்பட்டது.


மேலும் தீர்மானங்களுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக கடந்த வாரம் 28/05/2012 அன்று மனிதநேயமக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்களின் தலைமையில் நகர நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனார்.இச்சந்திப்பின் போது நகர பொருளாளர் சகோ.ஹாஜா மைதீன்,மமக நகர செயலாளர் சகோ.கபார்,நகரப்பெறுப்பாளர் முகம்மது ராசிக்,மாணவர் இந்திய பொறுப்பாளர்கள் ஜபருல்லா,ராசிக்,ஆகியோர் கலந்து கொண்டனர்.


மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சிய்ரை சந்தித்தை முன்னனி செய்தி பத்திரிக்கைகள் 29/05/2012 செய்தியினை வெளியிட்டது.




கோரிக்கை மனுவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்


  • மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இருக்கும் இரு மதுபானக்கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்

  • மதுக்கூர் அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்தவும்,விரிவாக்கம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • மதுக்கூர் காவல் நிலையத்தில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.


Sunday, April 15, 2012

மாஸ்கோவில் மாபெரும் பேரணி: ஓங்கி ஒலிக்கும் எழுச்சிக் குரல்!

சனிக்கிழமை (14.04.2012) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை ஒழுங்குசெய்திருந்தன. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகள் தினத்தை நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக ஸஸ்டாவா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் அணிதிரண்டனர்.

"தமது நாட்டின் சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும், தம்முடைய எதிர்காலத் தலைமுறை அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்; உலகில் வாழும் ஏனைய சிறுவர்களைப் போல கௌரவமான மகிழ்ச்சியான வாழ்வை அடையவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்திற்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பலஸ்தீன் கைதிகளின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையிலேயே நாம் இங்கு கூடியுள்ளோம்" என பேரணியினர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். 

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் எந்தவித நியாயமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், வருடக்கணக்காக பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகளின் பொறுமையும் தியாகமும் மகத்தானவை; கௌரவத்துக்கு உரியவை. எனவே, அவற்றை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பது இன்றியமையாததாகும்" என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் ஸியோனிஸ காட்டுமிராண்டித்தனங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகளின் போராட்டம் நியாயமானது. எனவே, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அவர்களின் சாத்வீகப் போராட்டத்தைத் தோல்வியடைய விடாமல் காப்பது மனிதத்துவமுள்ள அனைவரதும் கடமையாகும்" என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Thanks: inneram.com

Thursday, April 12, 2012

குஜராத் கலவரம்: 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தின்போது ஓடே கிராமத்தில் 23 பேரை உயிருடன் தீவைத்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். பலர் வாய் விட்டுக் கதறி அழுதனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. இது அநீதியானது. இந்த கோர்ட் நீதியின் ஆலயமல்ல என்று அவர்கள் குமுறினர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் கூடியிருந்தனர். அத்தனை பேரும் தீர்ப்பை எதிர்த்துக் கோஷமிட்டனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குஜராத் முழுவதும் பெரும் மதக் கலவரம் மூண்டது. இந்த நிலையில், ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் புகுந்த வெறியர்கள், அங்கிருந்த முஸ்லீம்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு 3 மாடிக் கட்டடத்தில் முஸ்லீ்ம் குடும்பங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தனர். அப்போது அந்த வீட்டை வெறியர்கள் தீவைத்து விட்டனர். இதில் 23 பேரும் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் மஜீத் மியான் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதவாத தாக்குதலில் ஓடே கிராம சம்பவமும் ஒன்றாகும். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் படை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 150 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 35 பேர் பிறழ் சாட்சியாகி விட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார்.

தற்போது தண்டனைக்குள்ளாகியுள்ள 46 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடந்த 9 மதக் கலவர வழக்குகளில் தற்போது 2வது வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 33 பேரின் உயிரைப் பறித்த சர்தார்புரா படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்புக் கோர்ட் தீர்ப்பளித்தது.

Saturday, March 31, 2012

திசை மாறும் ஊடகங்கள்

ஊடகங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கவரேஜ் செய்கின்றன. நாட்டின் எரியும் பிரச்சனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பினை தட்டிக் கழித்துவிட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய விஷயங்களைப் பரப்புவதில் அதீத ஆர்வம் காட்டும் செயலை பிரஸ் கவுன்சிலின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சமூகநல ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் மக்கள் நலன் நாடும் அமைப்புகளையெல்லாம் தொடர்ந்து கூறிவந்த கருத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பணியினை சிறப்பாக வகித்த மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பது பொருத்தமானது. வணிகநோக்கு ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க அறிவியல் பூர்வமான எந்தத் தீர்வையும் அவரால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 'பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிடுவதாலும், வெறும் 15 நாட்கள் போராடினால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது எனக்கூறிய கட்ஜு,

"நாட்டில் எரியும் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை என எவ்வளவோ இருக்க ஐஸ்வர்யா ராய் எப்போது குழந்தை பெறுவார், சச்சின் டெண்டல்கர் எப்போது சதம் அடிப்பார் என்பது போன்ற அறிவுப்பூர்வமான(?) விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைச் சாடினார். டெண்டுல்கர் சதம் அடிப்பதால் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா?"

என்று குத்தலாகக் கேட்டார்.



நாட்டின் 90 சதவீத ஊடகங்கள் இத்தகையப் போக்கினையே கடைப்பிடிப்பதை எவ்வளவு நாள்தான் சகித்துக் கொண்டிருப்பது என்ற வினாவினை நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். மார்க்கண்டேய கட்ஜு போன்ற நடுநிலையோடு செயல்படும் சான்றோர்களின் கருத்துக்கள் இப்போது தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டு மக்களின் மனநிலையை, பொதுப்புத்தியை வடிவமைக்க நினைக்கும் வணிகநோக்கு ஊடகங்களின் எண்ணம் இனிவரும் காலத்தில் நிறைவேறாது என்பது திண்ணம்.

மக்களின் விழிப்புணர்வு பற்றிப்பரவத் தொடங்கி யதால் செயற்கையான பரபரப்பு விரைவில் மறையத் தொடங்கும்

Thursday, March 29, 2012

பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு.

மூத்த பத்திரிக்கையாளர் செய்யது முஹம்மது காஸிமி டெல்லி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார். காஸிமியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, காஸிமிக்கு குடிக்க தண்ணீர் கூட ஒழுங்காகக் கொடுப்பதில்லை. அவருக்கு கொடுக்கும் உணவில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.அவரை விசாரணை என்ற பெயரில் தூங்க விடுவதில்லை. அவர் செய்யாதக் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இஸ்ரேலிய தூதரக காரில் வைக்கப்பட்ட காந்தக குண்டுவெடிப்பு வழக்கு என்பதால் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாத் பிரிவினரும் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு வகையான முறையில் காசிமி சித்திரவதை செய்யப்படுகிறார் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் செயலைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, மூத்த பத்திரிக்கையாளர் காஸிமிக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆதாரத்துடன் விளக்கினர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிடுகையில், இதுபோன்ற செயல் கவலை அளிப்பதாக குறிப்பிட்டு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுல்தான் அஹமது எம்.பி. உட்பட பத்து எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மூத்த பத்திரிக்கையாளருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பாமர முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய சான்றாக உள்ளது.

Sunday, March 25, 2012

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்


இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் சட்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான், ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன், மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் தஸ்பிக் அலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்க அமைப்புகள், பொதுநலஅமைப்புகள் கலந்து கொண்டனா;.

கோரிக்கை:

1) மதுரை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

2) மதுரை - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

3) திருச்சி - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

4) காரைக்குடி - கன்னியாகுமரி இடையே இராமநாதபுரம் வழியாக புதிய வழித்தடம்

5) ராமநாதபுரம் வந்துசேரும் சென்னை விரைவு ரயில் காலை 5 முதல் 8 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

6) சென்னை விரைவு ரயில்களை உச்சப்புளி ரயில்நிலையத்தில் நிறுத்துதல்.

7) சென்னை - ராமேஸ்வரம் இடையே சூப்பர் பாஸ்ட் வண்டியை பகல் நேரத்தில் விடுதல்

8) ராமேஸ்வரம் முதல் கோவை வரை ரயில் சேவை வேண்டும்.


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்;.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.




Thanks : tmmk.in

Thursday, March 22, 2012

புனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவிப்பு.

மயிலாடுதுறை மற்றும் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தோர் ஒரு குழுவாக, சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டனர், மஹ்தியா ஹஜ் சர்வீஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்றது.

புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள் இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட , தக்க துணையின்றிப் பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத நான்கு பெண்மணிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர் ஹைதர் அலி ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத் தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள் இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.

Wednesday, March 21, 2012

பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் பயணிகளுக்காக மார்ச் 24-ல் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்தில் (பி.எஸ்.கே.) ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் பெறும் வகையிலான ஹஜ் மேளா என்ற சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே. பாலமுருகன் தெரிவித்திருப்பது:

ஹஜ் யாத்திரை செல்லும் பாஸ்போர்ட் இல்லாத யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் பெற வசதி ஏற்படுத்தி தரும் வகையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் மேளா மார்ச் 24-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்த மேளா அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த மேளாவில் பங்கேற்கவுள்ள யாத்ரீகர்கள் இணையவழி மூலம் விண்ணப்பம் செய்து, விண்ணப்பப் பதிவு எண் நகலுடன் வர வேண்டும். மேலும், பாஸ்போர்ட்டுக்குத் தேவையான நகல், அசல் ஆவணங்களுடனும் வர வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. முன்பதிவு தேவையில்லை என்றார் அவர்.

Saturday, March 10, 2012

கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது-தமுமுக கவலை


சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அல்ஹஸா நகர புதிய நிர்வாகிகள் தேர்தல் மற்றும், “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் அல்ஹஸா நகரில் நடைபெற்றது.அல்ஹஸா மாநகர தமுமுக தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அல்ஹஸா, மாநகர தமுமுக பொருளாளர் ஜெக்கரிய்யா வரவேற்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணைத்தலைவரும், ஊடகத்துறை பொறுப்பாளருமான அப்துல் காதர், பொதுச்செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் நஸ்ருத்தீன் சாலிஹ், துணைச் செயலாளர் அப்துல் அலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்இரு அமர்வுகளாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல் அமர்வில் “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தனது தலைமையுரையில் “கலாச்சார சீரழிவு தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது. இப்போக்கு கவலையளிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் மாண்புகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும். இதற்கு வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.வெள்ளிக்கிழமை சிறப்பு பேருரையினை மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி நிகழ்த்தினார். தொழுகை – உணவு இடைவேளைக்கு பின்னர் கூடிய இரண்டாம் அமர்வில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மண்டல துணைத்தலைவர் அப்துல் காதர் பணியாற்றினார்.தலைவர் பதவிக்கு அஹமது சுகர்னோ மட்டுமே முன்மொழியப்பட்டதால், அஹமது சுகர்னோ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர்களாக ஜெக்கரிய்யா(தமுமுக), பரக்கத்துல்லாஹ்(மமக),, செயலாளர்களாக லால்பேட்டை அமானுல்லாஹ்(தமுமுக) ஆவனியாபுரம் ஷஹாபுதீன்(மமக), பொருளாளராக அன்வர், துணைச்செயலாளர்களாக ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா, கபீர், அப்துல் ஹக்கீம், ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் தமிழகத்திலிருந்து அலைப்பேசி வழியாக மமக பொதுச்செயலாளார் தமீமுன் அன்சாரி உரையாற்றினார். மண்டல நிர்வாகிகள் உரை, மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடலுக்கு பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.இறுதியாக அல்ஹஸா மாநகர தமுமுக துணைச்செயலாளர் ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா நன்றியுரையாற்றினர்..கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமுமுக மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் ஆவனியாபுரம் ஷஹாபுதீன், கந்தகுமாரன் அமானுல்லாஹ், கோட்டக்குப்பம் அப்துல் ரஹ்மான், பின்னத்தூர் ரபி, பரங்கிப்பேட்டை பாரூக் ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நன்றி:- இந்நேரம்.காம்

Sunday, March 4, 2012

அசினா பர்வீன்... நெகிழ வைத்த பிஞ்சு!


''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசை அவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த ரூ.3,052 சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!) 'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்! 'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!'' நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது! ஜூனியர் விகடன், 26.02.2012 அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழ வைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்து விட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார். பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்தவள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கை வைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின. ''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக்குள் சர்..சர் என சைக்கிள் விட்டுக் கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து. ''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர் கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார். 'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!'' நன்றி: ஆனந்த விகடன் 07 மார்ச்

Thursday, March 1, 2012

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைப்பு

தஞ்சாவூர், பிப். 28: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடைய பயனாளிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்ற முறை புகைப்படம் எடுக்கத் தவறியவர்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.தகுதியுடைய பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் நேரில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சிறப்பு மையம் ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் அலுவலக நேரத்தில் இயங்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஓர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறலாம்.இந்தத் திட்டத்தின் கீழ் இருதயம், சிறுநீரகம், நரம்பு, நுரையீரல், எலும்பு, மூட்டு, குடல் உள்ளிட்ட 1016 வகையான நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர சிகிச்சைகளை சிறந்த மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 13 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 1800 425 3993 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

நன்றி: திணமணி செய்தி 01-Mar-2012

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...